வியாபாரிகளுக்கு ஓய்வூதிய வழங்கும் திட்டம்!! (உலக செய்தி)
மத்தியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய மோடி பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்தார்.
முதல் மந்திரிசபை கூட்டத்தில் விவசாயிகள், சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் உதவி தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் 15 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள்.
மேலும் பிரதான் மந்திரி கிசான் மான்தன் யோஜனா திட்டமும் கொண்டு வரப்பட்டது. அதன்படி 60 வயதான தகுதியுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபா ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தை கடந்த மாதம் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் தொடங்கி வைத்தார்.
இதே போல சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. “பிரதான் மந்திரி லகு வியாபாரி மான்-தன் யோஜனா” என்று அந்த திட்டம் அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் கடைக்காரர்கள், சில்லரை வியாபாரிகள், சுய தொழில் செய்பவர்கள் பயன் பெறுவார்கள். ஜி.எஸ்.டி.யில் ஆண்டுக்கு ரூ.1½ கோடிக்கு கீழ் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்துள்ள வியாபாரிகள் இதில் பயன்பெற முடியும்.
18 வயது முதல் 40 வயது வரை உள்ள வியாபாரிகள் இந்த திட்டத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருக்க வேண்டும். அப்படி பதிவு செய்த சிறு வியாபாரிகளுக்கு அவர்கள் 60 வயது நிரம்பிய பிறகு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும்.
நாடு முழுவதும் 3 கோடி சில்லரை வியாபாரிகள் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள்.
சிறு வியாபாரிகளுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெறும் விழாவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
இதை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் அஜய் திவாரி தெரிவித்தார்.
நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களில் சிலருக்கு பென்சன் கார்டை பிரதமர் மோடி வழங்குவார் என்று அவர் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்ததும் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
Average Rating