வீட்டுக்குள்ளும் விஷக்காற்று…!! (மருத்துவம்)
காற்று மாசு பரவலான விவாதங்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவது நல்ல விஷயம்தான். இந்த நேரத்தில் வீட்டுக்குள் இருக்கும் காற்றும் சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். ஏனெனில், வெளிப்புற காற்றை விட வீட்டிற்குள் இருக்கும் மாசடைந்த காற்றினால் உடலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இன்றைய சூழலில் நாம் நமது வீட்டிலும், அலுவலகத்திலும் சுவாசிக்கும் காற்றில்கூட அதிக மாசு காணப்படுகிறது. வெளிப்புற மாசுக்கு எந்த விதத்திலும் குறையாத நிலையில் உட்புற மாசு உள்ளது. உட்புற மாசுபாட்டைப் பொறுத்தவரையில், மற்றவர்களைவிட சுவாசப் பிரச்னைகள் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பூட்டிய இடங்களில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிபொருட்கள், விளக்குகள் போன்றவற்றினால் காற்று மாசு ஏற்படுகிறது. உலகளவில் பொருளாதாரத்தில் குறைந்த மற்றும் நடுத்தர நிலையில் உள்ள நாடுகளில் 41 சதவீதத்தினர் மாசுபடுத்தும் எரிபொருட்களையே சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக வீட்டுக்குள் இருக்கும் காற்று மாசுபாட்டால் கடந்த 2016 ஆம் ஆண்டில் 38 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 5 வயதுக்குட்பட்ட 4 லட்சம் குழந்தைகளும் இறந்துள்ளனர்.
‘மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் மட்டுமின்றி கல்லீரல், மூளை, நரம்பு மண்டலம், இதயம், மண்ணீரல் என உடலின் அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும். மாசு காற்றை சுவாசிக்கும்போது ஆஸ்துமா போன்ற பிரச்னைகளில் ஆரம்பித்து புற்றுநோய் வரையில் பல்வேறு தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும். காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலம் இரண்டரை ஆண்டுகள் வரை குறைகிறது’ என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்புற மாசுபாட்டில் இருந்து விடுபட, அனைவரும் இயற்கையை நோக்கித் திரும்ப வேண்டும். இதற்காக வீட்டை சுற்றியும், வீட்டிற்குள்ளேயும் செடிகள் வைப்பதும், வளர்ப்பதும் அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.