ராதிகாவுக்கு ஜெயலலிதா திடீர் ‘ஆப்பு’ – ராதிகாவை அதிமுகவிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா
நடிகை ராதிகாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவிலிருந்து வெளியேறிய நடிகர் சரத்குமார், ஜெயலலிதாவை ஆண்டிப்பட்டியில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது அவருடன் மனைவி ராதிகாவும் அதிமுகவில் சேர்ந்தார். இருவருக்கும் அப்போது ஜெயலலிதா அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
ஆனால் சரத்குமாரின் கட்டாயத்தின் காரணமாகவே ராதிகா அவருடன் ஜெயலலிதாவை சந்தித்தார் என்று அப்போது கூறப்பட்டது. அதை நிரூபிப்பது போல சரத்குமாருடன் ஜெயலலிதாவை சந்தித்ததோடு சரி, அதன் பின்னர் அதிமுக தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் ராதிகா கலந்து கொள்ளவில்லை. அதிமுகவுக்காக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை.
மேலும், ராதிகாவின் ராடான் நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் சன் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தன.
இந் நிலையில் ராதிகாவை கட்சியிலிருந்து நீக்கி ஜெயலலிதா திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக நடந்து வரும் நடிகை ராதிகா, கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தி விட்டார்.
எனவே இன்று முதல் ராதிகா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். கட்சித் தொண்டர்கள் ராதிகாவுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராதிகாவுடன் அதிமுவினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா கூறியிருப்பது, அதிமுக உறுப்பினரான நடிகர் சரத்குமாருக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை.