வியக்க வைக்கும் முன்னோர் உணவுப்பழக்கம்!(மருத்துவம்)
நம் தமிழர் மரபுப்படி அதிகமாக பயன்படுத்தப்பட்ட உணவுகளில் மிக முக்கியமானமை உளுந்தோதனம், எள்ளோதனம், கடுகோதனம், எள்ளு சோறு, கொள்ளு சோறு, கடுகு சோறு போன்றவையே. மேலும் உளுந்தங் களி, கேழ்வரகு களி, கோதுமை களி, வெந்தயக் களி போன்றவையும் இடம்பெற்றன. குழந்தைகளுக்கு கேழ்வரகு களி கொடுக்க வேண்டும். இதில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது. இதில் வளரும் பிள்ளைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும், எலும்புகளின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களும் அதிகமாக உள்ளது. பஞ்சமுட்டி கஞ்சி குழந்தைகளுக்குத் தேவையான சக்தியை கொடுக்கும்.
துவரை, உளுந்து, கடலை, பாசிபயறு, பச்சரிசி ஆகியவற்றை கைப்பிடி அளவு எடுத்து துணிகளில் முடிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 4 பங்கு நீர் ஊற்றி ஒரு பங்காக வற்றவிடவும்.
பெண்கள் எள்ளோதனம் எனப்படும் எள்ளு கலந்த உணவு மற்றும் கொள்ளு சோறு, கடுகு சோறு போன்றவற்றை அதிகப்படியாக உண்டு வந்தால் நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகள் நல்ல நிலையில் இருக்கும். தற்போது சமூகத்தில் அதிகமாக பேசப்படும் தைராய்டு பிரச்னைகளை தடுக்க இந்த உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது.
நடுத்தர வயதுடைய இளைஞர்கள் நல்ல திடகாத்திரமான உடல் அமைப்பைப் பெறுவதற்கு உளுந்தோதனம் அல்லது உளுந்தங்களி போன்றவை இன்றியமையாதது. உடைந்த எலும்பைகூட கூட்டும் தன்மை இந்த உளுந்துக்கு உள்ளது. உளுந்தோதனம் முறைப்படி உண்டு வந்தால் இதய நோய்களை தடுக்கலாம். பூப்பெய்தும் பெண்கள், கர்ப்பிணிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு இது மிகவும் ஏற்றது.
முதியவர்கள் திடப் பொருட்களைத் தவிர்த்து எளிதில் செரிக்கக்கூடிய கஞ்சி வகைகளையே பயன்படுத்தினர். கேழ்வரகு கஞ்சி, பால் கஞ்சி, உளுந்தங்கஞ்சி மற்றும் சிறப்பாக ெவந்தயக்
களியை பயன்படுத்தினர். இது உடலில் குளிர்ச்சியை உண்டாக்கி, செரிமானத்தை சீராக்கும். வெந்தயக்களியில் அமினோ அமிலம், கொழுப்பு அமிலம், கரோட்டீன் வைட்டமின், ஜெட்ரோஜெனின், ட்ரைகோனெல்லோசைட், ட்ரைகோனெல்லின் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளது.
காலத்துக்கேற்ற உணவுப்பழக்கம்
குளிர் காலத்தில் உடலுக்கு அதிக வெப்பம் தேவைப்படும். எனவே அதிக சத்து கொண்ட கடுக்காய் கஞ்சி, எள்ளு கஞ்சி, கொள்ளு கஞ்சி போன்ற உணவுகளை பயன்படுத்தினர். கோடை காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்ட கேழ்வரகு களி மற்றும் வெந்தயக் களியை உட்கொண்டனர். கோடை காலங்களில் காலை மற்றும் மதிய வேளைகளில் எல்லா வயதினரும் இதை சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், குடல் புண்களை ஆற்றவும் உதவுகிறது. வயதானவர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியமான உணவு வெந்தயக்களி. இது உடலில் குளிர்ச்சியை உண்டாக்கவும், வயிற்றுப் புண்களை ஆற்றவும், செரிமான கோளாறுகளைப் போக்கவும் உதவுகிறது.