இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ உடனடி நிதியுதவி தேவை: ஐ.நா.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கான மனிதநேயத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவசரமாக நிதியுதவி அவசியம் எனக் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வந்திருக்கும் மக்களுக்கான உணவுகள், உடுதுணிகள், தற்காலிக கூடாரங்கள் மற்றும் குடிநீர் போன்றவற்றை வழங்குவதில் சிரமங்கள் காணப்படுவதாக வவுனியாவுக்குச் சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வந்திருக்கும் கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் மனிதநேய இணைப்பாளர் நெய்ல் புனே தெரிவித்துள்ளார். “கைக்குழந்தைகள் பல தொற்றுநோய்களுக்கு உள்ளாகியிருப்பதுடன், பல சிறுவர்களும், பெண்களும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவான மக்கள் மாதக்கணக்காக ஒரே ஆடைகளையே அணிந்திருப்பதால் அவை பழுதடைந்திருப்பதைக் காணக்கூடியதாகவிருந்தது” என அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து, குடிநீர், சுகாதாரம், போசாக்கு, தற்காலிக கூடாரங்கள், உடுதுணிகள் போன்றவற்றுக்கு எமக்குத் தற்பொழுது உடனடியான நிதியுதவி தேவைப்படுகிறது என நெய்ல் புனே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொடர்ந்துவரும் மோதல்களில் இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு 155 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி தேவையென ஐக்கிய நாடுகள் சபை கடந்த பெப்ரவரியில் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில் மேலும் 90,000ற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க உடனடி நிதியுதவி தேவையென ஐ.நா. அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
“ஒரு வருடத்துக்கும் மேலாகத் தொடரும் மோதல்களால் இந்த மக்கள் தமது வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவ்வாறு சிக்கல்களுக்கும் மத்தியில் அவர்கள் உயிர்வாழ்வது ஆச்சரியமளிக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
முகாம்களில் ஏற்பட்டிருக்கும் இடப்பற்றாக்குறை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், இடம்பெயர்ந்த மக்களைத் தங்கவைப்பதற்கு அரசாங்கம் மேலும் பல காணிகளை ஒதுக்கித் தரவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த முதியவர்கள் சிலர் வெளியேற முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும், மேலும் பல முதியவர்கள் இன்னமும் முகாம்களில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய புனே, முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஐ.நா.வின் உள்ளூர் பணியாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating