விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் மக்களின் பாதுகாப்புக்கே முக்கியமளிக்க வேண்டும்: த.தே.கூ.
பாதுகாப்பு வலயத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களில் பாதுகாப்பு வலயத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் சக பாராளுமன்ற உறுப்பினர் கூறியிருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். “பொது மக்களின் பாதுகாப்பே மிகவும் முக்கியமானது. ஆனால் அதனைக் கவனத்தில் கொள்ளாமல் மோதல்கள் தொடர்ந்தால் நிலமை மிகவும் மோசமடைந்துவிடும். 125,000 பேர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர். இந்த மோதல்களில் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது” என இரா. சம்பந்தன் தெரிவித்தார். அந்தப் பகுதியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருள்கள் சரியான முறையில் கிடைக்காததால், பலர் பட்டினியால் கொல்லப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் மேலும் கூறினார். அதேநேரம், ஒன்று அல்லது இரண்டு பயங்கரவாதிகளை அழிப்பதற்காக அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதை யாரும் மன்னிக்கமாட்டார்கள் எனப் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழர்களும் எமது நாட்டுப் பிரஜைகளாகக் கருதினால் தொடர்ந்து வரும் மோதல்களை அரசாங்கம் உனடடியாக நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோ அல்லது புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டம்மானோ அங்கு பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கலாம், ஆனால் அதுபற்றி எமக்கு எதுவும் தெரியாது என நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா கூறினார். “பயங்கரவாதம் ஒழிக்கப்படுகின்றது என்ற பெயரால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது” என்றார் அவர்.
Average Rating