கடற்தொழிலுக்கு சென்ற இருவர் சடலமாக மீட்பு
யாழ் மாவட்டம் அராலி மேற்கு கோட்டைக்காடு பகுதியில் மீனவர்கள் இருவர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு தொழிலுக்காகச் சென்ற இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் வரை வீடு திரும்பாததால் உறவினர்கள் அவர்களை அப்பகுதிகளில் தேடினர். அப்போது பற்றை ஒன்றுக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர்களது சடலங்களை கண்டுபிடித்துள்ளனர். அராலியை சொந்த இடமாகக் கொண்ட நாகராசா செல்வராசா (வயது 36) நடராசா நகுலேஸ்வரன் (வயது 31) ஆகிய இருவருமே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் கடலுக்குச் சென்ற வடமராட்சி பகுதி மீனவர்கள் இருவரை காணவில்லை என யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை தேவசகாயம் சாந்தகுமார், சூசைப்பிள்ளை றெஜினோல்ட் ஆகிய இருவருமே காணாமற் போயிருப்பதாக கூறப்படுகிறது.