துபாயில் ரூ.13 கோடி கேட்டு இந்தியச்சிறுமி கடத்தல் -போலீசார் மீட்டனர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்த 13 வயது இந்தியச்சிறுமி கடத்தப்பட்டாள். அவளை விடுதலை செய்ய வேண்டுமானால் 13 கோடி ரூபாய் பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்று கடத்தல் காரர்கள் கேட்டனர். இந்த சிறுமியை போலீஸ்காரர்கள் மீட்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்து வரும் இந்தியரின் மகள் பாத்திமா முகம்மது முனீர். 13 வயதான அவள் கடத்தப்பட்டாள். அவளைக் கடத்திய அரேபியர்கள் 13 கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார்கள். இது பற்றி அவளது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் 48 மணி நேரத்தில் அவள் அடைத்து வைத்திருக்கும் இடத்தை கண்டு பிடித்து அவளை மீட்டனர்.
மிகத் திறமையாக துப்பறிந்து குற்றவாளிகளை 47 போலீசார் கண்டு பிடித்து சிறுமியை மீட்டனர். இதைப் பாராட்டி அவர்களுக்கு விருது வழங்கும் விழா துபாயில் நடந்தது. நாட்டின் துணை அதிபரும், பிரதமரும், சார்ஜா மன்னருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் கலந்து கொண்டு அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இந்த விழாவில் மந்திரிகளும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.