சதாமை விசாரிக்கும் கோர்ட் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது: பெண் வழக்கறிஞர் புகார்
இராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனிடம் விசாரணை நடத்தும் தலைநகர் பாக்தாதில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று பெண் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் வாதாடினார் லெபனானைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் புஷ்ரா அல்-கலீல். இவர் பாக்தாத் கோர்ட்டில் கடந்த வாரம் விசாரணை நடந்து கொண்டிருந்த போது கோர்ட் அறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.
அவர் பெய்ரூத்தில் அவர் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
சதாம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான வழக்கில் அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு பின்னணியில் இருந்து நீதிபதி உள்பட கோர்ட்டில் உள்ள அனைவருக்குமே கட்டளையிட்டு வருகிறது.
விசாரணை மேற்கொண்டு வரும் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு கோர்ட் காவலர்கள் மூலம்சிறு குறிப்பை அமெரிக்க வழக்கறிஞர்கள் குழு கொடுத்தனுப்பி வழக்கு விசாரணையைத் தங்கள் கட்டுப்பாட்டில் அமெரிக்கர்கள் வைத்துள்ளனர்.
“வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கோர்ட்டைச் சுற்றி பாதுகாப்பு அளிக்கும் பணியில் அமெரிக்க வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்; ஆனால், நீதிமன்றப் பணிகளில் அமெரிக்கா தலையிடவில்லை’ என பெயர் வெளியிட விரும்பாத யுஎஸ் அதிகாரி இ-மெயில் மூலம் இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ளார்.
“சதாமை விசாரிக்கும் கோர்ட் நூறு சதவீதம் இராக் கட்டுப்பாட்டில் உள்ளது. கோர்ட் முடிவை யாராலும் திருத்த முடியாது அல்லது எந்த ஒருவருக்கும் சாதமாக தீர்ப்பு வழங்குமாறு யாரையும் நிர்பந்திக்க முடியாது’ என்றும் கலீல் குற்றம் சாட்டினார்.