இலங்கை அகதி ஆஸியில் தற்கொலை
அவுஸ்திரேலியாவில் பேர்த் என்னுமிடத்தில் புகழிடக்கோரிக்கையாளர்களை தங்கவைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் இலங்கை புகலிட கோரிக்கையாளர்களில் ஒருவர் வார இறுதியில் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளார். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை காரணமாகவே இலங்கை அகதி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்துகொண்ட நபரின் மனைவியும் பிள்ளையும் இலங்கையில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக இவருக்கு அறிவிக்கப்பட்டதா என்பது தொடர்பில் கூறுவதற்கு குடிவரவுத்திணைக்களம் மறுத்துள்ளது.
முகாமில் வசிப்பதற்காக விஸா பெற்றிருந்த இவர் சனிக்கிழமையன்றே வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளார். இவருடைய ஆளடையாளத்தை குடிவரவுத் திணைக்களம் வெளிப்படுத்தவில்லை. குடிவரவுத் திணைக்களம் இவரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
அகதிகள் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் அமைப்பைச்சேர்ந்த விக்டோரியா மார்டீன் இவர் பயந்துக் கொண்டிருந்தார் என்றுக் கூறினார். குடிவரவுத் திணைக்களம், விடுவிக்கப்பட்ட புகலிட கோரிக்கையாளர்களுக்கு கூடுதலான ஆதரவு வழங்கவேண்டும் எனவும் தேவையான ஆதரவின்றி இவர்கள் கைவிடப்படுவதாகவும் அவர் கூறினார்.
இவரது உடல் அவுஸ்திரேலியாவில் தகனம் செய்யப்பட்டு சாம்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு நவம்பரில் இருந்து 10336 பேருக்கு முகாமில் வாழும் விஸா வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating