வாகன விபத்தில் 8 பள்ளிமாணவர்கள் உட்பட 9 பேர் பலி!!
புதுக்கோட்டை அருகே இன்று புதன்கிழமை நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் எட்டு பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக செய்திகள் கூறுகின்றனர்.
கைக்குறிச்சி எனும் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் வல்லத்திராக்கோட்டையில் அவர்கள் பயிலும் அரசுப் பள்ளிக்குச் செல்ல பேருந்திற்காக காத்திருந்தனர். நெடுநேரமாகியும் பஸ் எதுவும் வராத நிலையில் அவர்கள் அவ்வழியே வந்த சரக்கு வாகனம் ஒன்றில் பயணித்தனர்
அப்போது, புதுக்கோட்டையிலிருந்து எதிரே வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து, அந்த வாகனத்தின் மீது மோதியது.
இதில் சரக்கு வாகனத்திலிருந்த 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்தார். சரக்கு வாகனத்தின் ஓட்டுநரும், மேலும் ஒரு மாணவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தனர். வாகன ஓட்டுநரின் உதவியாளரும், மேலும் 3 மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இப்பகுதியில் போதிய பேருந்து வசதி இல்லாததன் காரணமாகவே இப்படி அபாயகரமான பயணங்களை மாணவர்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கிறதென கைக்குறிச்சி மக்கள் கூறுகின்றனர்
Average Rating