யாழ்ப்பாணம் சென்ற பஸ்ஸில் தமிழ் பாடலை ஒலிபரப்ப மறுத்ததால் முறுகல்…!!
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனியார் பயணிகள் பஸ் ஒன்றில் தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்ப மறுத்து சிங்களப் பாடல்களை ஒலிபரப்பியதால் முறுகல் நிலையும் குழப்பமும் ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் சென்ற இந்த பஸ்ஸில், கொழும்பிலிருந்து பஸ் புறப்பட்ட நேரம் முதல் சிங்களப் பாடல்களை ஒலிபரப்பியதால் அதனை நிறுத்துமாறு நடத்துனரிடம் பயணிகள் கேட்டபோது பாடலை நிறுத்த நடத்துனர் மறுத்ததால் முறுகல் நிலையும் குழப்பமும் ஏற்பட்டது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது; இந்த பஸ்ஸில் சிங்கள இசைக்கச்சேரி பாடல்களே ஒலிபரப்பப்பட்டன. இரவு 11 மணியைத் தாண்டிய நிலையில் அவற்றை நிறுத்துமாறும் அல்லது தமிழ்ப் பாடல்களைப் போடுமாறு பயணிகள் கேட்டுள்ளனர். தாம் போடும் பாடல்களை மட்டுமே கேட்க முடியுமென்றும் விடுமுறையில் சென்ற இராணுவத்தினர் சிலர் இருப்பதாகவும், அவர்களுக்காகவே இந்தப் பாடல்களை ஒலிபரப்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பல தடவைகள் பயணிகள் கேட்டபோதும் அந்த நடத்துனர் தொடர்ந்து சிங்களப்பாடலையே ஒலிபரப்பினார். பயணிகளின் கோரிக்கையை சிறிதும் கவனத்திலெடுக்கவில்லை. பஸ்ஸில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் தமிழர்கள் என்பதால் தமிழ்ப் பாடலைப் போடுமாறு கேட்டனர்.
இதையடுத்து முறுகல் நிலையும் குழப்பமும் ஏற்பட்டன. தொடர்ந்து பயணிகள் கூச்சலிட்டு எதிர்ப்பைக் காட்டியதையடுத்து சிங்கள இசைக்கச்சேரிப் பாடல்களை நடத்துனர் நிறுத்திக்கொண்டார். எனினும் தமிழ்ப் பாடல்களைப் போடவேயில்லை. இவ்வாறான பஸ்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Average Rating