58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய, சவேந்திர சில்வாவிற்கு வீசா வழங்க கனடாவும் மறுப்பு
ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு வீசா வழங்க கனடா மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், 58ஆவது பிரிவுக்கு தலைமை தாங்கிய சவேந்திர சில்வா, போர்க்குற்றங்களை புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளார்.
அதன்படி போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலரை, கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கமைய, இவரது படைப்பிரிவினர் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நாவுக்கான பிரதித் தூதுவராக இவர் இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார்.
எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, இவரை அமெரிக்க இராணுவ போர்க் கல்லூரியில் பயிற்சிக்காக இணைந்து கொள்வதற்கு அமெரிக்கா அனுமதி வழங்க மறுத்திருந்தது.
அதேபோல், அண்மையில் சவேந்திர சில்வாவை, தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக நியமிக்க இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது.
கனடாவில் ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக அண்மையில், அங்கு செல்ல முயன்றபோதே, அவருக்கு வீசா வழங்க கனேடிய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இறுதிக்கட்டப் போரில் 57ஆவது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய ஜெகத் டயசுக்கும் வீசா வழங்க அவுஸ்திரேலியா மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating