நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது, குளிருக்கு 21 பேர் பலி..!!
அமெரிக்காவில் டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில் புத்தாண்டு முடிந்து சில நாட்களிலேயே குளிர் மேலும் அதிகரித்து பனிப்புயல் வீசத் தொடங்கியது.
வெப்பநிலை படிப்படியாக குறைந்து உறைபனியை தொட்டது.
பூஜ்யத்திற்கும் கீழே சரிந்த வெப்பநிலை அடுத்த ஓரிரு நாட்களிலேயே துருவ பிரதேசங்களான ஆர்டிக் பிரதேசங்களில் காணப்படுவதை போல மைனஸ் 45 டிகிரி வரை இறங்கியது.
இதனால் அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்கள், கனடாவின் ஒரு பகுதி என அனைத்தும் கடுமையாக உறைபனிக்கு பாதிக்க தொடங்கின. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வாகனங்களில் செல்லவும், அவ்வாறு செல்லும் வாகன ஓட்டிகள் தகுந்த பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நகரங்களின் முக்கிய சாலைகள், விமான நிலையங்களின் ஓடு தளங்கள் ஆகியவற்றில் தேங்கியிருக்கும் உறைபனி இரவு பகலாக அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த உறைபனி காரணமாக வாகன விபத்துகளிலும், குளிரில் சிக்கியும் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய பகுதிகளில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்கா, கனடாவில் உள்ள நதிகள் துருவ பிரதேசங்களில் காணப்படுவதைப் போல உறைந்தன. மிக்சிகன் ஏரி அப்படியே மிகப் பெரிய மைதானம் போல உறைந்தது.
சுற்றுலா பயணிகள் யாரும் பனியை கருதி ஏரிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதே போல் அமெரிக்கா கனடா எல்லைப் பகுதியில் அமைந்ததுள்ள உலகின் மிகப் பெரிய நயாகரா நீர்வீழ்ச்சியும் உறைந்தது.
இதனால் மிகப் பெரிய பனிச்சிற்பம் போல் காட்சியளிக்கிறது. நேற்று முதல் படிப்படியாக வெப்பநிலை பூஜ்யத்தை நோக்கி உயரத் தொடங்கியுள்ளதால் ஓரிரு நாட்களில் அமெரிக்கா இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உறைபனி காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 1 கோடியே 60 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கியுள்ளனர்.
Average Rating