சீனாவில் தாய்-தந்தையை கொன்று எரிக்க முயன்ற ‘பாசக்கார மகன்’ கைது
சீனாவில் பெற்றோரை கொன்று விட்டு, கொலையை மறைப்பதற்காக பிணங்களை எரிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சீனாவின் ஃபெங்சியான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றத்துடன் புகை வருவதாக அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் அந்த வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். வீட்டினுள் பாதி எரிந்த நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் பிணங்கள் பாதி எரிந்த நிலையில் புகைந்து கொண்டிருந்தன.
அந்த வீட்டை முழுவதுமாக பரிசோதித்த போலீசார், மாடிப்பகுதிக்கு சென்றபோது பால்கனியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரது மயக்கத்தை தெளிய வைத்து ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது ‘பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்து வீட்டில் கிடந்த மழுங்கிப்போன அரிவாளால் தாக்கி அவர்கள் இருவரையும் கொன்றேன்.
இந்த கொலை வெளியே தெரியாமல் மறைப்பதற்காக அவர்களின் உடலில் டீசலை ஊற்றி எரிக்க முயன்றேன். நான் எதிர்பார்த்தபடி, பிணங்கள் முழுமையாக எரியாமல் அணைந்து விட்டன். போலீசார் பிடித்து விடுவார்களே.. என்ற பயத்தில் என்னை நானே வெட்டிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தேன்.
இரண்டு உயிர்களை பலி வாங்கிய, பாழாய் போன அந்த ‘மொக்கை’ அரிவாள் எனது தற்கொலை முயற்சிக்கு துணை புரிய மறுத்து விட்டது’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Average Rating