அமெரிக்காவில் மகளை சுட்டுக் கொன்று, இந்திய பெண் தற்கொலை முயற்சி
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ஒருவர், தனது மகளை சுட்டுக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஓவிடோ என்ற ஒரு சிறிய நகரில் தனது 17 வயது மகளான சேதனா குதுருவுடன் வசிப்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஜாதா குதுரு (44). ஓரியாண்டோ என்ற இடத்தில் உள்ள மேல்பள்ளியில் சேதனா படித்தார்.
சம்பவத்தன்று சுஜாதாவின் கணவர் ராவ் குதுரு அட்லாண்டாவில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க சென்று விட்டார்.
இந்நிலையில் அவரது வீட்டில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஓவிடோ போலீசார், படுக்கையில் சுஜாதாவும், சேதனாவும் ரத்த வெள்ளத்தில் குண்டு காயங்களுடன் கிடப்பதை கண்டனர்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அவர்களை சேர்த்தனர். ஆனால், சேதனா அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில வாரங்களாகவே சுஜாதா மனமுடைந்த நிலையில் தற்கொலைக்கு முயன்று வந்துள்ளார். சில தினங்களுக்கு முன்புதான் கை துப்பாக்கி ஒன்றை புதிதாக வாங்கி உள்ளார்.
சம்பவத்தன்று வீட்டில் ராவ் குதுரு இல்லாத நேரத்தில் சேதனாவை சுட்டுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் அதிர்ஷ்டவசமாக சுஜாதா உயிர் தப்பினார். அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்தும், தான் இறந்த பிறகு தனது மகளை யார் பார்த்து கொள்வார் என்று கவலையில் சுட்டுக் கொன்றதாகவும் போலீசாரிடம் சுஜாதா தெரிவித்துள்ளார்.
Average Rating