இறுதிப் போர்க்குற்ற ஆதாரங்கள் அழிப்பு; மற்றுமொரு சர்வதேச அறிக்கை
வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் கடைசி ஒரு வருடத்தில் இராணுவமே அதிகளவான போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்று மற்றுமொரு சர்வதேச அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை அழிப்பதிலும் இராணுவம் ஈடு பட்டுவருவதாகவும் அனைத்துலக குற்றவியல் ஆதாரத் திட்டம் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
இராணுவத்தினர் போரின் இறுதி ஒரு வருடத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதை நிரூபிக்கும் வகையில், ‘தீவுகளின் தண்டனை’ என்னும் தலைப்பில் இந்த புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
பொது நல ஆலோசனை மையத்தின், அனைத்துலக குற்றவியல், ஆதாரத் திட்டம் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில், போர்க்குற்றங்கள் குறித்து ஒளிப்படங்கள் தொடர்பான தடயவியல் ஆய்வு, செய்மதிப்படங்கள், சுதந்திரமான இராணுவ ஆய்வாளர்களின் கருத்துகள், புதிய சாட்சிகளின் பதிவுகள் என்பவற்றைக் கொண்டுள்ளது.
போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்ற பெரும்பாலான போர்க்குற்றங்களுக்கு இராணுவமே பொறுப்பு என்றும், பொது மக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தடயங்களை முறைப்படி அழிப்பதற்கு வெளிப்படையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசு பிரகடனப்படுத்திய போர் தவிர்ப்பு வலயத்தில், பொதுமக்கள் மீது திட்டமிட்டு, கண்மூடித்தனமான பீரங்கித்தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து இந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.
கண் மூடித்தனமான தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன், உள்ளிட்ட சரணடைந்த புலிகளின் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் இந்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மீதான பாலியல் வன்புணர்வு, சித்திரவதை, மருத்துவமனைகள் மீதான பீரங்கித் தாக்குதல்கள், பொதுமக்களுக்கு உணவு மருந்து கிடைக்காது தடுத்தமை குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களும் சிறுவர் போராளிகளும் புலிகளால் மனித கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டது குறித்தும் அந்த அறிக்கை ஆராய்கிறது.
இலங்கையில் இறுதிப்போரின் போது போர்க்குற்றங்களும், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளன என்று கண்டறிந்துள்ள இந்த அறிக்கை,
இது குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இரு தரப்பினாலும் வன்முறைகள் இழைக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆய்வு நடத்தப்பட்ட, 2008 செப்ரெம்பர் தொடக்கம் 2009 மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு இராணுவமே பொறுப்பாக இருந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசு இத்தகைய குற்றச்சாட்டுக்களை மறுத்தாலும், அனைத்துலக விசாரணையை நடத்துவதன் மூலம், மிக மூத்த அரச மற்றும் இராணுவ அதிகாரிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிக்கு கொண்டு செல்ல வழிவகுக்கலாம் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் புதைக்கப்பட்டது மற்றும் மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பான மூன்று வௌ;வேறு சாட்சிகளின் சாட்சியங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
போர் முடிந்த பின்னர், பொதுமக்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மனித எச்சங்களை இராணுவத்தினர் திட்டமிட்டு அழித்து விட்டதாக ஒரு சாட்சி குற்றம் சாட்டியுள்ளமை தொடர்பிலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கை இராணுவமும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதற்கு நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அமைத்த தரிஸ்மன் குழுவும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
Average Rating