தேர்தல் பிரசாரம் செய்ய, குஷ்புக்கு தடையா?
நடிகை குஷ்பு தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளராக இருக்கிறார். 2011 சட்டமன்ற தேர்தலில் இவரது பிரசாரம் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. குஷ்பு பேச்சை கேட்க பெரும் கூட்டம் கூடியது. திராவிட இயக்க வரலாறுகளை தெள்ளத்தெளிவாக எடுத்து வைத்தார். எதிர்கட்சிகள் மீதும் சரமாரியாக வசை பாடினார்.
தேர்தலுக்கு பிறகும் முக்கிய கூட்டங்களுக்கு குஷ்பு அழைக்கப்பட்டு மேடை ஏற்றப்பட்டார். இப்படி ஏறுமுகமாக இருந்த அவரது அரசியல் பயணம் தி.மு.க. தலைமை பற்றி சர்ச்சை கருத்து சொன்னதால் சரிவை சந்தித்தது.
தி.மு.க. தலைவர் யார் என்பதை கட்சியின் பொதுக் குழுதான் முடிவு செய்யும் என்று அவர் அளித்த பேட்டியொன்று தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது வீடு கல் வீசி தாக்கப்பட்டது. போராட்டங்களும் நடந்தன. இதனால் அதிர்ச்சிக்குள்ளானார். எதிர்ப்பாளர்களை தி.மு.க. தலைமை கழகம் கண்டித்ததால் சுமூக நிலைமை திரும்பியது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் குஷ்புவின் பங்கு என்னவாக இருக்கும். அவரை தேர்தல் பிரசாரத்துக்கு கட்சி பயன்படுத்திக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டு உள்ளன.
தேர்தலில் குஷ்பு போட்டியிடுவார் என்ற யூகங்கள் இருந்தன. ஆனால் அவர் சீட் கேட்டு விண்ணப்பம் கொடுக்கவே இல்லை. சட்டமன்ற தேர்தலில் நிற்பதே அவரது விருப்பமாக இருக்கிறது என்கின்றனர்.
தி.மு.க.வின் முன்னணி, தலைவர்கள் தீவிர பிரசாரத்தை துவங்கியுள்ளனர். குஷ்புக்கு இன்னும் பிரசாரம் செய்ய அழைப்பு வரவில்லை. இதனால் விரக்தியில் இருப்பதாக செய்திகள் பரவி உள்ளன. தி.மு.க.வில் இருந்து விலகுவது பற்றி யோசிப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்டபோது வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று பதில் அளித்தார்.
தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்த போது குஷ்புவுக்கு பிரசார சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரல் தயாராகி வருவதாகவும் வருகிற 1–ந்தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் தெரிவித்தனர். ஆனால் குஷ்புவை பிரசாரத்துக்கு அனுப்ப கூடாது என்று இன்னொரு புறம் எதிர்ப்புகள் கிளம்புவதாகவும் கூறப்படுகிறது.
Average Rating