நெல்லையில் கொள்ளையடித்த சென்னை வாலிபர் காதலியுடன் வெளிநாடு தப்ப திட்டம்!!
நெல்லை பகுதியில் நடந்த சங்கிலி பறிப்பு கொள்ளையில் தொடர்புடைய சென்னை பட்டதாரி வாலிபர் சீனிவாசன் (வயது 21) மற்றும் அபிஷேக் (24) ஆகிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 100 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த எல்ராயன் என்ற பட்டதாரி வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். நெல்லையில் நடந்த தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்திற்கு எல்ராயன் தான் தலைவனாக இருந்து செயல்பட்டு வந்துள்ளான்.
எல்ராயன் பிடிபட்டால் மேலும் சுமார் 100 பவுன் தங்க நகைகள் வரை மீட்கப்பட வாய்ப்புள்ளது. எல்ராயனுடன் அவனது காதலி மகாலட்சுமியும் சேர்ந்து தலைமறைவாகிவிட்டார்.
இவர்கள் 2 பேரின் செல்போன் எண்களை வைத்து அவர்களை பிடிக்க போலீசார் முயற்சி செய்தனர். முதலில் கோவை பகுதியில் பதுங்கி இருந்த இவர்கள், பின்னர் ஹைதராபாத், தெலுங்கானா பகுதியில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. தற்போது இருவரும் தங்கள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, வேறு செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
எல்ராயனுக்கு சென்னை, கோவை, ஐதராபாத், மும்பை உள்பட பல்வேறு இடங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் எல்ராயன், தனது காதலி மகாலட்சுமியுடன் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளார். இவரது பெற்றோர்கள் இருவரும் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் அவர்கள் உதவியுடன் வெளி நாட்டில் தஞ்சம் புக முடிவு செய்துள்ளனர்.
இதையறிந்த நெல்லை தனிப்படை போலீசார் எல்ராயன் மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் பாஸ்போர்ட்டை முடக்கி வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
Average Rating