விரைவாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்று!!
கடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா தொற்றுநோய்க் காய்ச்சல் அண்டை நாடுகளான லைபீரியா மற்றும் சியரா லியோனில் கிடுகிடுவென்று பரவத் தொடங்கியுள்ளது. இதுநாள் வரை 670 பேரைப் பலி வாங்கியுள்ள இந்த நோயினால் சியரா லியோனில் இறந்தவர்கள் மட்டும் 224 பேர் என்று கூறப்படுகின்றது.
தலைநகர் பிரீடவுனில் இந்த நோயை எதிர்த்துப் போராடிய முன்னணி மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ஷேக் உமர் கானும் இந்த நோய்க்கு பலியாகியுள்ளது மருத்துவப் பணியில் உள்ள மற்றவர்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.
பரவிவரும் இந்த ரத்தக்காய்ச்சல் வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவரும் ஒரு புதிய நடவடிக்கையாக அங்கு பொது சுகாதார அவசர நிலையை அதிபர் எர்னெஸ்ட் பை கொரோமா பிரகடனப்படுத்தியுள்ளார். இதன் ஒரு கட்டமாக அந்நாட்டுக்கு வரும் விமானப் பயணிகள் அனைவரும் தங்களின் கைகளை கிருமிநாசினிகளால் கழுவிக்கொண்டு உடல் வெப்பநிலையைப் பரிசோதித்துக் கொண்ட பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அண்டை நாடான லைபீரியாவில் பாதுகாப்பு கருதி பள்ளிகள் மூடப்பட்டு சில சமூகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சியரா லியோனிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிப்பதற்காக இரு நாடுகளின் அதிபர்களும் அடுத்த வாரம் வாஷிங்டனில் நடைபெறும் அமெரிக்க-ஆப்பிரிக்க உச்சி மாநாட்டிற்கு செல்வதை ரத்து செய்துள்ளனர். இதனிடையில் கென்யா மற்றும் எத்தியோப்பியா நாடுகள் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வரும் பயணிகளை பரிசோதனை செய்யத் துவங்கியுள்ளன. சந்தேகப்படும் பயணிகளைக் கையாளவேண்டிய முறை குறித்தும் விமான ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
எனினும், உலக சுகாதாரக் கழகத்திடம் ஆலோசித்தபின்னர் பயணிகளின் வருகையைத் தவிர்க்கவோ, விமான நிலையங்களை மூடவோ தேவையில்லை என்று சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம்(ஐஏடிஏ) இன்று அறிவித்துள்ளது. எபோலாவால் பாதிக்கப்பட்டவர் விமானத்தில் பயணிக்கும்போது இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் ஐஏடிஏ தெரிவித்துள்ளது.
ஆனாலும், இந்த வார தொடக்கத்தில் அஸ்கி என்ற பிராந்திய விமான நிறுவனமும், நைஜீரியாவின் அரிக் ஏர் நிறுவனமும் லைபீரியா மற்றும் சியரா லியோனுக்கான தங்களின் விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.
Average Rating