பாலியல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளிக்கும் உறைவிடப் பள்ளி!!
கொல்கத்தாவின் சோனாகாச்சி, கிர்திபூர் பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்களின் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளித்து வாழ்வில் முன்னேற்றத்தை வகுத்துக்கொள்ள உதவும்விதமாக அரசு சாரா ‘ஆப்னே ஆப் விமன் வோர்ல்ட்வைட்’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
தாயுடன் சிவப்பு விளக்குப் பகுதியிலேயே தங்கி வளரும் பிள்ளைகளின் வாழ்க்கைச் சூழலும் இதே நிலையை அடையக்கூடும் என்று கூறும் என்ஜிஓ ஊழியர் சஹானா தாஸ்குப்தா, கடந்த சில வருடங்களாகவே இங்கிருக்கும் பிள்ளைகளை பரக்பூரில் செயல்பட்டுவரும் ராமகிருஷ்ணா விவேகானந்தா மிஷன் உறைவிடப் பள்ளியில் சேர்த்து வருவதாகத் தெரிவிக்கின்றார்.
“கொல்கத்தாவிலிருந்து சில கி.மீ தொலைவில் இருக்கும் இந்தப் பள்ளியில் இந்த வருடமும் 22 பிள்ளைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்கள் தாய்மார்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள களங்கத்தை மறப்பதற்காக அவர்கள் அனைவரும் ஒன்றாகவே மற்ற மாணவர்களுடன் தங்க வைக்கப்படுகின்றனர். நாங்கள் அவர்களைத் தனியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. இதனால் அவர்களும் மற்றவர்களுடன் நன்கு பழகத் தொடங்குகின்றனர்” என்று பள்ளியின் செயலாளர் சுபாங்கர் மகாராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்கும் வண்ணம் பல்வேறு துறைகளில் அவர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முதலில் தங்கள் தாயிடம் இருந்து பிரிந்து வருவது குறித்து இந்தப் பிள்ளைகள் வருத்தமடைந்தாலும் நாளடைவில் கல்வி, விளையாட்டு என்று தாங்கள் சந்தோஷமாக இருப்பதாக இங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். தாங்கள் நல்ல பணியில் அமர்ந்ததும் தங்கள் தாய்மார்களை அந்த சூழலில் இருந்து விடுவிக்கவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் உள்ளது. இதுவே எங்களின் வெற்றியாகும் என்று மகாராஜ் மகிழ்வுடன் குறிப்பிடுகின்றார்.
Average Rating