பணம் கொடுக்காததால் மோதல்: ஏலச்சீட்டு நடத்திய பெண் வீடு தீவைத்து எரிப்பு!!
திருவள்ளூரை அடுத்த புட்லூர் உல்லாசம்நகர் பி.எல்.பி.தெருவை சேர்ந்தவர் ஜானகி. ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் உள்பட சுமார் 30–க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர்.
இந்த நிலையில் தியாகராஜன் ரூ.1 லட்சம் ஏலச்சீட்டை எடுத்தார். கூறியபடி அவருக்கு ஜானகி பணத்தை கொடுக்கவில்லை. இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் உருவானது.
தியாகராஜனருக்கு ஆதரவாக பேசிய அவரது உறவினர் பரணிகுமாரை, ஜானகியின் உறவினர்கள் கவுதம், பிரதீப், மணி ஆகியோர் வெட்டினர். இதில் பரணிகுமார் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று இரவு மர்மகும்பல் ஜானகி வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டில் தங்கி இருப்பது தெரிந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த டி.வி.பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை நொறுக்கி சூறையாடினர்.
மேலும், சிதறி கிடந்த பொருட்களுக்கு தீ வைத்து தப்பி ஓடி விட்டனர். வீடு தீப்பற்றி எரிவதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைத்தனர். எனினும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இது குறித்து ஜானகி செவ்வாப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரில்,
வீட்டை சூறையாடிய கும்பல் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்து உள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating