தொழிலாளி கொலை: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்ததால் கொன்றதாக கைதானவர் வாக்குமூலம்!!
ஆம்பூர் 2–வது தார்வழியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் 3–வது தார்வழி, பிலால்நகரை சேர்ந்த ரவி மகன் பத்மராஜ் (வயது 23) என்பது தெரிய வந்தது.
பிணமாக கிடந்த பத்மராஜின் கால்களில் காயம் இருந்தால் அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பத்மராஜை கொலை செய்ததாக ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் எஸ்.பி. மணியிடம், 2–வது தார்வழியை சேர்ந்த பிரகாஷ் (28) என்பவர் சரண் அடைந்து வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
நானும், பத்மராஜும் ஒரே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தோம். எனக்கு துர்கா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். எனது மனைவிக்கும் பத்மராஜுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த நான் பத்மராஜை எச்சரிக்கை செய்தேன். ஆனால் அவன் எனது மனைவியிடம் உள்ள தொடர்பை கைவிட மறுத்தான். இதனால் அவனை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி கடந்த சனிக்கிழமை பத்மராஜை அழைத்துக்கொண்டு செங்கல் சூளைக்கு வந்தேன். 2 பேரும் மது அருந்தினோம். அப்போது எனது மனைவியிடம் உள்ள தொடர்பை கைவிடும்படி கூறினேன். அவன் மறுத்தால் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.
அப்போது போதை முற்றிய பத்மராஜ் அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தான். இது தான் சமயம் என்று சூளையில் இருந்த அரிவாளை எடுத்து அவனது காலிலும், கழுத்திலும் அறுத்து கொன்று விட்டு, தெரியாமல் இருக்க அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசினேன். அதன்பின் சென்றுவிட்டேன். போலீசார் எப்படியும் என்னை கைது செய்துவிடுவார்கள் என்று கருதி சரண் அடைந்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.
அதைத்தொடர்ந்து சரண் அடைந்த பிரகாஷ் ஆம்பூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating