இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சி!!
கோவை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரம் 2–வது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 26). அண்ணா மார்க்கெட் கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (22). இவர்களுக்கு கெவின் பிரசாத் (2) என்ற மகனும், தன்யா ஸ்ரீ என்ற 8 மாத குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கிருஷ்ண மூர்த்தி வேலை முடிந்து தனது 2 குழந்தைகளுக்கும் தீபாவளிக்காக புதுத்துணி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றார். வீட்டில் துணி எடுக்க செல்வதற்காக நந்தினி ஆவலுடன் காத்திருந்தார். கணவர் துணி எடுத்து வந்ததை அறிந்த நந்தினி ஆத்திரமடைந்தார்.
தன்னை அழைத்து செல்லாமல் எப்படி துணி எடுத்து வரலாம்? என கணவரிடம் சண்டையிட்டார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி மனைவியிடம் கோபித்துக் கொண்டு அருகிலுள்ள தனது உறவினரின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த நந்தினி மன விரக்தியில் சாணிப்பவுடரை கரைத்து மகன் கெவின் பிரசாத்துக்கும், 8 மாத குழந்தை தன்யா ஸ்ரீக்கும் கொடுத்தார். பின்னர் அவரும் குடித்தார். சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள உறவினர் சந்தோஷ் வீட்டுக்கு சென்று தானும், குழந்தைகளும் விஷம் குடித்து விட்டோம். மருத்துவமனையில் சேர்க்கும்படி கூறிவிட்டு மயங்கினார்.
அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் நந்தினி மற்றும் அவரது குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து 3 பேரும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 8 மாத கைக்குழந்தை தன்யா ஸ்ரீ பரிதாபமாக இறந்தது. நந்தினிக்கும், கெவின் பிரசாத்துக்கும் டாக்டர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating