நாடாளுமன்ற தாக்குதல்- தீவிரவாதத்தால் மிரட்ட முடியாது! கனடிய பிரதமர்!!
தீவிரவாதத்தை கொண்டு கனடாவை ஒருபோதும் மிரட்ட முடியாது என கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
கனடா தலைநகர் ஒட்டாவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு நேற்று காலை பாதுகாப்புப் படை வீரர் போன்று உடையணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்துள்ளார்.
போர் நினைவிடம், நாடாளுமன்ற மைய கட்டடம், ரிடேயூ கட்டடம் ஆகிய பகுதிகளில் நோக்கி அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.
பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கொல்லப்பட்டார், பாதுகாப்பு படை வீரரும் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது நாடாளுமன்றத்திற்குள் இருந்த கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மற்றும் எம்.பி.க்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் செல்லும் சாலைகள் உடனடியாக மூடப்பட்டு, நாடாளுமன்ற வளாகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
இதனையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கியிருப்பதாக கனடா காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கனடா மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும், இத்தாக்குதலில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பருடன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசினார்.
அப்போது, தாக்குதல் சம்பவம் பற்றி ஒபாமாவிடம் ஸ்டீபன் ஹார்ப்பர் எடுத்துக் கூறியதாக தெரிகிறது.
மேலும் இச்சம்பவம், மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது என்றும், அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்வதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் வலைத்தளத்தில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
இரண்டாம் இணைப்பு
இதுகுறித்து கனடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் கூறுகையில், மூன்று நாட்களில் நடந்த இரண்டாவது தீவிரவாத தாக்குதல் இதுவாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நம்மை பயமுறுத்த முடியாது என்றும், தீவிரவாதத்தை கொண்டு ஒருபோதும் கனடாவை மிரட்ட முடியாது எனவும் கூறியுள்ளார்.
Average Rating