நாங்குநேரியில் வீட்டு முன் நின்ற பெண் வெட்டி சாய்ப்பு: அண்ணன் –தம்பி வெறிச்செயல்!!
நாங்குநேரி ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி கிருஷ்ணம்மாள். இவர்களுக்கும் அப்பகுதியை சேர்ந்த முத்துடையார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் முத்துடையார், அவரது மகன்கள் சுப்பையா, தளவாய் ஆகிய 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணம்மாள் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். இது குறித்து கிருஷ்ணம்மாள் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். இதையறிந்த முத்துடையார் மற்றும் அவரது மகன்கள் ஆத்திரமடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணம்மாள் அவரது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பையா, தளவாய் ஆகிய 2 பேரும் அரிவாளால் கிருஷ்ணம்மாளை சரமாரி வெட்டினர். இதில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் கிருஷ்ணம்மாளை மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல இருந்தனர். ஆனால் கிருஷ்ணம்மாள் பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுத்துவிட்டார். ஏற்கனவே நான் முத்துடையார் மற்றும் அவரது மகன்கள் மீது புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வேன் என்று கூறி ஆஸ்பத்திரியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் நாங்குநேரி டி.எஸ்.பி.சண்முகம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து கிருஷ்ணம்மாள் பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சுப்பையா, தளவாயை தேடி வருகின்றனர்.
Average Rating