குடும்ப தகராறில் அண்ணனை அடித்து கொன்ற தம்பி!!
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு இன்னாசியார்புரத்தை சேர்ந்த மரியதாஸ் மகன் சேவியர் ஜெயசீலன் (வயது37). இவரது மனைவி சேவியர் மேரி (35). சேவியர் ஜெயசீலனின் தம்பி சேசுராஜ்(30), மற்றொரு சகோதரர் ரமேஷ்செல்வம் ஆகியோர் இதே பகுதியில் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
அண்ணன் தம்பிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று சேசுராஜ் மற்றும் சேவியர் மேரியின் தம்பி பன்னீர்செல்வம் குடிபோதையில் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது சேவியர் ஜெயசீலன் அவர்களை சத்தம் போட்டார். இதனால் குடிபோதையில் இருந்த சேசுராஜ் தனது அண்ணன் என்றும் பாராமல் சேவியர் ஜெயசீலனை உருட்டுக்கட்டையால் பயங்கரமாக தாக்கினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அவரது உடல்நிலை மோசமடையவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே சேவியர் ஜெயசீலன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் அவர்கள் அண்ணனை அடித்துக்கொன்ற சேசுராஜை தேடி வருகின்றனர். குடிபோதையில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating