கணவரின் குடிப்பழக்கத்தால் வீட்டைவிட்டு மாயமான பெண் பெங்களூரில் மீட்பு!!
திருவட்டார் வியன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர். இவரது மனைவி நிரோஜாய் (வயது 35). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார்.
ஜான்கிறிஸ்டோபர் ரப்பர் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கமும் இருந்தது. இதனால் இரவு வெகுநேரம் கழித்தே வீடு செல்வார். இதனால் கணவன்–மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இது அடிக்கடி தொடர்ந்த நிலையில் கடந்த மாதம் திடீரென நிரோஜாய் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். கணவர் ஜான் கிறிஸ்டோபர் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர் இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான நிரோஜாயை தேடி வந்தனர்.
அவரது பெற்றோர் வீட்டில் விசாரித்த போது நிரோஜாயின் சகோதரி ஒருவர் பெங்களூரில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. எனவே நிரோஜாய் பெங்களூர் சென்றிருக்கலாம் என கருதிய போலீசார் அங்கு சென்று விசாரித்த போது அவர் பெங்களூரில் தங்கையின் வீட்டில் தங்கியிருந்தது தெரிய வந்தது.
போலீசார் நிரோஜாயை அங்கிருந்து மீட்டு வந்து அவரது கணவரிடம் ஒப்படைத்தனர். ஆனால் நிரோஜாய், கணவருடன் செல்ல மறுத்து பெற்றோருடன் போவதாக கூறினார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்த போது கணவரின் குடி பழக்கத்தால் வீட்டில் தினமும் பிரச்சினை ஏற்படுகிறது. என்னையும், மகனையும் தினமும் அடித்து உதைக்கிறார். அவருடன் குடும்பம் நடத்த முடியாது. எனவே என்னை பெற்றோருடன் அனுப்பி வையுங்கள். நான் இனி கணவருடன் வாழ மாட்டேன் என்றார்.
போலீசார் நிரோஜாவுக்கு அறிவுரை கூறினர். கணவரிடமும் குடிப்பழக்கத்தை கைவிட்டு மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என கூறினர். ஆனால் நிரோஜாய் போலீசாரின் சமரசத்தை ஏற்க மறுத்தார். வீட்டுக்கு சென்றதும் கணவர் மீண்டும் குடிப்பழக்கத்துக்கு மாறி விடுவார். அவர் திருந்தமாட்டார் என கூறினார். எனவே இன்றும் திருவட்டார் போலீசில் சமரச பேச்சு நடக்கிறது.
Average Rating