உ.பி.: பெண்களை கேலி செய்ததை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்துக் கொன்ற சிறார் குற்றவாளிகள்!!
உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரின் சூரஜ்குண்ட் பகுதியில் சிறு வயது குற்றவாளிகளை அடைத்து வைக்கும் அரசு காப்பகம் ஒன்றுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் பிடிபட்ட சிறுவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரை புலந்த்ஷாகர் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று ஒரு வேனில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இவர்களின் பாதுகாப்புக்கு சில போலீசாரும் போடப்பட்டிருந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் மீரட்டுக்கு அழைத்து வரும்போது வழியில் சென்ற பெண்களைப் பார்த்து இந்த சிறுவர்களில் சிலர் ஆபாசமான சைகளை காட்டியதாக கூறப்படுகிறது.
இதைத் தட்டிக் கேட்ட போலீஸ்காரர்களை காப்பகத்துக்கு வந்து சேர்ந்ததும் மிரட்டிய இந்த சிறுவர்கள் ஓம்பிரகாஷ் என்ற போலீஸ்காரரை சகட்டு மேனிக்கு அடித்து, உதைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். தடுக்க முயன்ற 5 போலீசாரையும் அவர்கள் பந்தாடித் தள்ளினர்.
பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஓம்பிரகாஷ், உள்காயங்களின் விளைவாக இன்று உயிரிழந்தார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட சுமார் 25 சிறுவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து, 100 பேர் மட்டுமே தங்கும் வசதியுள்ள இடத்தில் சுமார் 250 சிறார்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் மீரட் இளஞ்சிறார்கள் காப்பகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Average Rating