இந்தியாவின் கோரிக்கையை மீறி சந்தேகநபர் இலங்கையிடம் ஒப்படைப்பு!!!
இலங்கையை சேர்ந்த முஹம்மது ஹுசைன் முஹம்மது சுலைமான் (47) என்பவர் போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்த போது அந்நாட்டின் குடியுரிமை துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, அந்நாட்டு பொலிசார் நடத்திய விசாரணையில் அவர் இலங்கையில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது தெரியவந்தது.
மேலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தீட்டித் தந்த திட்டத்தின்படி, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் பெங்களூரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் ஆகியவற்றின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய கும்பலுக்கும் மலேசியாவில் பிடிபட்ட முஹம்மது சுலைமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை இந்திய உளவுத்துறையினர் கண்டு பிடித்தனர் என தமிழக ஊடகமான மாலைமலர் செய்தி வௌியிட்டுள்ளது.
இதனையடுத்து, முஹம்மது சுலைமானை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மலேசிய அரசிடம் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.
அவர் மீது இலங்கையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசும் கோரிக்கை வைத்தது.
கொலை வழக்கு தொடர்பாக அவரை தேடும் இலங்கையிடம் முஹம்மது சுலைமானை ஒப்படைக்கும் முன்னர் சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய அவரிடம் இருந்து இந்த சதியில் தொடர்புடையவர்கள் தொடர்பான பல தகவல்களை விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, அவரை முதலில் எங்களிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்று மலேசிய அரசை இந்தியா மீண்டும் வற்புறித்தியது.
இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த மலேசிய அரசு முஹம்மது சுலைமானை இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது.
Average Rating