பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை வெட்டிக் கொன்று நக்சல்கள் அட்டூழியம்!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் அட்டூழியம் செய்துவரும் நக்சலைட் தீவிரவாதிகள் இன்று பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டன்ட்டேவாடா மாவட்டத்தில் உள்ள கர்ட்டே கல்யான் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றிவந்த சங்கர் பிரசாத் ஜோஷி(45) இன்று அங்குள்ள சந்தையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். வேலை நேரம் முடிந்து அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த நக்சல் தீவிரவாதிகள் கூரிய ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கினர்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரது துப்பாக்கியையும் பறித்துக் கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார், சங்கர் பிரசாத் ஜோஷியை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு விரைந்தனர்.
ஆனால், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பட்டப்பகலில் போலீஸ்காரரையே வெட்டிக் கொன்ற நக்சல்களின் அட்டூழியம் அப்பகுதி மக்களிடையே பெரும் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Average Rating