விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பிறந்து 3 நாட்களே ஆன பெண்குழந்தை வீச்சு!!
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலையில் பஸ்சுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அதிகாலை 5 மணி அளவில் பஸ்நிலையத்தில் சற்று இருள் சூழ்ந்திருந்த பகுதியில் இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது.
அழுகை சத்தம் நிற்காமல் தொடர்ந்து கேட்டதால் சில பயணிகள் சந்தேகமடைந்து அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு துணி சுற்றப்பட்ட நிலையில் பிறந்து 3 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை வீசப்பட்டு அனாதையாக கிடந்தது.
அதனை கண்டு திடுக்கிட்ட பயணிகள், அந்த குழந்தையின் தாயாரை சுற்றி முற்றிலும் தேடி பார்த்தனர். ஆனால் அருகில் யாரும் இல்லை. எனவே விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அந்த குழந்தையை மீட்டு, பராமரிப்புக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்தனர். கல்மனதுடன் குழந்தையை அனாதையாக வீசி சென்றது யார்? அந்த குழந்தையை யாரும் திருடி கடத்தினரா? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating