கந்து வட்டி கேட்டு மிரட்டலால் ரஜினி மன்ற நிர்வாகி தற்கொலை முயற்சி: 4 பேர் மீது வழக்குபதிவு!!
நாகர்கோவில் மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 33). ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயற்குழு உறுப்பினரான இவர் பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.
இவர் வியாபாரத்துக்காக சிலரிடம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம். இதற்காக இவர் 5 காசோலைகளை கொடுத்துள்ளார். வட்டியும், முதலுமாக ரூ.9 லட்சத்தை திருப்பிக் கொடுத்த பிறகும் இவர் கொடுத்த காசோலைகளை திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
கடன் கொடுத்தவர்கள், கூடுதல் வட்டியுடன் சேர்த்து ரூ.13 லட்சம் தர வேண்டும் என்று கூறி ஜெகதீசை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த ஜெகதீஷ் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜெகதீஷ் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறினார். அரசமூடு சந்திப்பு பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் ஹரி, நாகராஜன், கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த ரமேஷ் ஆகியோர் என்னிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டுகிறார்கள் என்று கூறியதோடு இதுதொடர்பாக புகாரையும் அளித்தார்.
புகாரின்பேரில் கண்ணன் உள்பட 4 பேர் மீதும் கோட்டார் போலீசார் கந்து வட்டி தடுப்பு சட்டம் 2003 உள்பட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் விசாரணை நடத்தி 4 பேரையும் தேடிவருகின்றார்.
Average Rating