கணக்கு போட தெரியாதவருடன் திருமணமா?: மணமேடையில் இருந்து மணமகள் வெளிநடப்பு!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எழுதப்படிக்க தெரியாத மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மறுத்து தாலி கட்டும் வேளையில் மணமேடையில் இருந்து மணமகள் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரின் அருகிலுள்ள ரசூலாபாத் பகுதியில் கடந்த புதன்கிழமை ஒரு திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகூர்த்த நேரம் நெருங்கியபோது, அருகில் இருந்த மணமகனிடம் ஒரு கணக்குக்கு விடை கூறும்படி மணப்பெண் கூறினாள்.
அதற்கு மணமகன் மிகவும் தப்பான பதிலை கூறியதால், ‘எழுத்தறிவில்லாத இவனை கட்டிக்கொண்டு நான் காலம் எல்லாம் எப்படி குடித்தனம் செய்வது?’ என்று கோபம் கொப்பளிக்க கூறிய அந்த பெண், கழுத்தில் கிடந்த மாலையை தூக்கியெறிந்து விட்டு, பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
மாப்பிள்ளை வீட்டார் செய்த சமரசத்துக்கு ஒத்துப்போகாத பெண்ணின் தந்தை, உள்ளூர் போலீசார் மூலம் மாப்பிள்ளைக்கு அளித்த வரதட்சணை பணம் மற்றும் நகைகளை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இத்தனைக்கும் அந்த பெண் கேட்ட கணக்கு அவ்வளவு கடினமானதும் அல்ல…, பதினைந்தும் ஆறும் எத்தனை? என்ற சாதாரண கேள்வியைதான் கேட்டுள்ளார். இதற்கு அந்த சூரப்புலி மாப்பிள்ளை கொஞ்சமும் தயங்காமல் 17 என்று பதில் அளித்துள்ளார்.
இதேபோல், இங்குள்ள ராம்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு திருமண விழாவின்போது, மாலை மாற்றும் வேளையில் வலிப்பு வந்து மணமகன் மயங்கி விழுந்ததால் சகோதரியின் மைத்துனரை மணமகள் கரம் பிடித்த சம்பவம் நிகழ்ந்தது, நினைவிருக்கலாம்.
Average Rating