நெல்லை அருகே கிறிஸ்தவ ஆலயம் அவமதிப்பு: 5 வாலிபர்கள் கைது!!
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ளது வடக்கு வாகைகுளம். இங்கு ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு குருத்தோலை ஞாயிறையொட்டி இரவு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில் நள்ளிரவு ஆலயத்தில் மர்ம நபர்கள் சாணத்தை வீசி ஆலயத்தை அவமரியாதை செய்தனர்.
காலையில் இதை பார்த்த அப்பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் அங்கு திரண்டு ஆலயத்தை அவமதித்தவர்களை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். இதுபற்றி ஆலய உறுப்பினர் தினகரன் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது22), ராஜா(20), மனோ(19), செல்வம்(22), அருள்ராஜ்(19) ஆகியோர்தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து தேவராஜ் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 5 பேரும் கேரளாவில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் ஊருக்கு வந்தனர். குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சிக்கு டெக்கரேசன் செய்தவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 5 பேரும் சேர்ந்து குடிபோதையில் ஆலயத்தை அவமரியாதை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
Average Rating