சேலத்தில் வட மாநில தொழிலாளி கொலை: ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பீகார் வாலிபர் சிக்கினார்!!
சேலம் இரும்பாலை கணபதி பாளையத்தில் தனியார் செருப்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகிறார்கள்.
நேற்று இரவு பீகார் மாநிலம் பர்கரா பகுதியை சேர்ந்த சஞ்சய் திம்பு (வயது 25) என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார். டாஸ்மாக் மதுக்கடையில் மது குடித்து விட்டு அறைக்கு வந்து தங்கிய போது அவருக்கும் அவருடன் பணியாற்றும் சக தொழிலாளி டன்டன் (25) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கத்தியால் சஞ்சயை குத்தி விட்டு தப்பி விட்டார். இதில் பீகார் வாலிபர் சஞ்சய் திம்பு ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இந்த கொலை குறித்து தகவல் கிடைத்ததும் இரும்பாலை இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட தொழிலாளி பிணத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தலைமறைவான வாலிபர் டன்டன்னை தேடி வந்தனர். அவர் ரெயில் மூலம் தப்பி இருக்கலாம் என்று கருதினர். அவர் அணிந்து இருந்த சிகப்பு கலர் சட்டை மற்றும் கறுப்பு கலர் பேண்ட் மூலம் அவரை பிடிக்க போலீசார் வலை விரித்தனர். சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு சென்ற இரும்பாலை போலீசார் ஜங்ஷன் ரெயில் நிலைய இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உதவியுடன் தப்பி ஓடிய பீகார் வாலிபர் குறித்து விசாரித்தனர்.
அவர் ரெயில் மூலம் தப்பி சென்றதை டீ விற்கும் வியாபாரி ஒருவர் பார்த்து போலீசாரிடம் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை விசாரணை நடத்தி அந்த வாலிபரை பிடித்து சேலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவரை சேலம் போலீசார் இன்று ரெயில் மூலம் சேலம் அழைத்து வந்தனர். அவரிடம் நண்பரை கொன்றது ஏன் என்பது குறித்து இரும்பாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating