சேலத்தில் பெண்களை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக் கொலை: போலீசார் விசாரணை!!
சேலம் அன்னதானப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் ராகுல் (வயது 19). கார்பென்டர் வேலை செய்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த மாதம் 29–ந் தேதி காலை காலை 10 மணிக்கு வீட்டை விட்டு சென்றவர் போதையில் பகல் 2–30 மணிக்கு வீட்டுக்கு வந்தார். இரவு 9 மணிக்கு வாயில் இருந்து ரத்தம் வந்தது.
உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவ பணியாளர் ராகுலை பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். அப்போது காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததால் மறுநாள் ( 30–ந்தேதி) மகுடங்சாவடிக்கு அவனது பிணத்தை எடுத்து சென்று அங்கு உள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ராகுலின் தாயார் தனசெல்வி அன்னதானப்பட்டி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதுவதாகவும் கூறி இருந்தார்.
இந்த புகார் மனு குறித்து அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராஜன் விசாரணை நடத்தினார். விசாரணையில் ராகுல் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கடந்த மாதம் 29–ந்தேதி மணியனூர் பொடரான் காடு பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்த போது அவர் அந்த வழியாக சென்ற இளம்பெண்களை கேலியும், கிண்டலும் செய்து உள்ளார். இதை சந்தோஷ் என்ற வாலிபர் தட்டிக்கேட்டு உள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் சந்தோஷ் இரும்புக் கம்பியால் ராகுலின் தலையின் பின்பகுதியில் தாக்கி உள்ளார். போதையில் இருந்த ராகுலுக்கு அது தெரியவில்லை. மயங்கி கிடந்த அவரை நண்பர்கள் அழைத்து வந்து வீட்டில் விட்டு சென்றனர். மகன் அடிக்கடி மது குடிப்பதால் போதையில் விழுந்து கிடக்கிறான் என்று பெற்றோர் நினைத்தனர். இதனால் அவர்கள் மகனின் பிணத்தை சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.
தற்போது ராகுல் கொலை செய்யப்பட்ட தகவல் போலீஸ் நடத்திய விசாரணையில் உறுதியானதால் அவரது பிணம் இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டது. சங்ககிரி தாசில்தார் செல்வி மற்றும் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராஜன் ஆகியோர் முன்னியையில் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த இடத்திலேயே பிண பரிசோதனை நடக்கிறது. பிண பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானால் சந்தோஷ் கைது செய்யப்படுவார்.
Average Rating