ஜோலார்பேட்டையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பாலில் விஷம் கலந்து சிறுவன் கொலை?
திருப்பத்தூர் அடுத்த குரிசலாபட்டு பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 60). இவரது மகன் உதயகுமார் (23) எலக்ட்ரீசியன். உதயகுமாருக்கும், ஜோலார்பேட்டை மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்த ஷில்பா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் ஆன சில மாதங்களில் உதயகுமாரின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் ஷில்பாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
உதயகுமார் வேலைக்கு சென்ற பிறகு ஷில்பா தனது கள்ளக்காதலனுடன் வெளியில் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
ஷில்பாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மாமனார் பாலுவும், மைத்துனன் லட்சுமணனும் (வயது 10) அவரை நோட்டமிட்டனர். லட்சுமணன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வந்தான்.
ஒருகட்டத்தில், ஷில்பாவின் கள்ளக்காதல் விவகாரம் அவர்களுக்கு தெரியவந்தது. மகனுக்கு துரோகம் செய்கிறாய் என பாலு கண்டித்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஷில்பாவின் கள்ளக்காதல் பற்றி உதயகுமாரிடமும் கூறினாராம். உதயகுமாரும் ஷில்பாவை கண்டித்தார்.
இந்நிலையில் இன்று காலை ஷில்பா மாமனாருக்கும், மைத்துனனுக்கும் பால் கொடுத்தார். பாலை குடித்த சில நிமிடங்களில் பாலுவும், லட்சுமணனும் மயங்கி விழுந்தனர்.
சிறிது நேரத்தில் லட்சுமணன் வாயில் நுரை தள்ளியபடி உயிரிழந்தார். பாலு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
ஷில்பா உடனடியாக கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து இறந்த லட்சுமணனையும், உயிருக்கு போராடிய பாலுவையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக பாலு தர்மபுரி அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து குரிசிலாப்பட்டு சப்–இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் ஷில்பாவை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பாலில் விஷம் கலந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து வந்த திருப்பத்தூர் டி.எஸ்.பி. சுப்பிரமணி ஷில்பாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating