மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் தந்தை தற்கொலை!!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் திருப்பூரை சேர்ந்த கணேசன் (வயது 44) என்பவர் வந்தார். இவர் கட்டிட தொழிலாளி ஆவார்.
கோபி வேட்டைக்காரன் கோவிலுக்கு வந்த அவர் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தினார். பிறகு தனது உடைகளை கழட்டி அதன் மீது வைத்துவிட்டு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார்.
வாய்க்காலில் குளிக்கப் போவது போல் போன அவர் வாய்க்காலில் பாய்ந்தார். ஆனால் அவர் வெகு நேரமாகியும் கரைக்கு வரவில்லை.
அதேசமயம் அருகில் இருந்தவர்கள் வாய்க்காலில் குதித்தவரை திடீரென காணவில்லையே என்ன ஆனார்? என்று தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு படைக்கும் தகவல் கொடுத்தனர். கோபி தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிசங்கர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். திங்களூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
வாய்க்காலில் குதித்த கணேசனை தேடினர். திங்களூர் அருகே உள்ள நல்லாம்பட்டி கீழ்பவானி வாய்க்காலில் கணேசனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
பிறகு போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக திங்களூர் போலீசார் நடத்திய விசாரணையில் வாய்க்காலில் விழுந்து பலியான கணேசனின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த கணேசன் மோட்டார் சைக்கிளில் வந்து கீழ்பவானி வாய்க்காலில் குறித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.
மேலும் தற்கொலை செய்து கொண்ட கணேசனுக்கு சுதா என்ற மனைவியும் ஒருமகனும் உள்ளனர்.
Average Rating