பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் ஐ.ஜி.யிடம் புகார்!!
நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகள் சுபா (வயது 25), எம்.டெக். பட்டதாரி. மதுரை வந்த அவர், தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங்கை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–
நான் கன்னியாகுமரி மாவட்டம் கண்ணன்பதியை சேர்ந்த அய்யப்பன் என்பவரை 4 வருடமாக காதலித்து வந்தேன். அய்யப்பன், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் பட்ட மேற்படிப்பு (எம்.இ.) படித்து வருகிறார்.
எங்களது காதல் விவகாரம் என் பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான், கடந்த 15–ந்தேதி வீட்டை விட்டு வெளியேறி அய்யப்பனுடன் திருச்சிக்கு சென்றேன். திருச்சி பொன்மலையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு, திருச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டோம். அதன் பின்னர், திருமணம் செய்து கொண்ட விவரத்தை என் தந்தைக்கு செல்போன் மூலம் தெரிவித்தேன்.
என் தந்தை நெல்லையை சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி. ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார். அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி என்னையும், என் கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். மேலும், என் கணவரின் குடும்பத்தினர், நண்பர்களை தேடி சென்று அவர்களையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். எங்களை காப்பாற்றி கொள்வதற்காக நானும், எனது கணவரும் தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள என் தோழியின் வீட்டில் தங்கி இருக்கிறோம். எனவே, எனக்கும் எனது கணவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்று கொண்ட ஐ.ஜி., உரிய நடவடிக்கைக்காக மனுவை நெல்லை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைத்தார். இளம்பெண் சுபாவுடன், அவரது காதல் கணவர் அய்யப்பன், வக்கீல் பாஸ்கர் மதுரம் ஆகியோர் உடன் வந்தனர்.
Average Rating