பஞ்சாபில் பஸ்சில் மேலும் ஒரு பெண் மானபங்கம்: தடுக்க தவறிய டிரைவர்–கண்டக்டர் கைது!!
பஞ்சாப் மாநிலம் மோகாவில் சில நாட்களுக்கு முன் ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியிடம் சிலர் தவறாக நடக்க முயற்சித்தனர். அப்போது அவர்கள் சிறுமியை பஸ்சில் இருந்து வெளியே தள்ளி கொலை செய்தனர்.
பஞ்சாப் முதல்–மந்திரி குடும்பத்தினருக்கு சொந்தமான பஸ்சில் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று அங்கு கன்னா என்ற இடத்தில் ஓடும் பஸ்சில் பெண் மானபங்கம் செய்யப்பட்டார். அந்தப் பெண் அமர்ந்திருந்த இருக்கையில் வந்து ஒரு வாலிபர் அமர்ந்தார். திடீரென்று அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
உடனே அந்த பெண் சத்தம் போட்டு டிரைவர் – கண்டக்டரை உதவிக்கு அழைத்தார். அவர்கள் பஸ்சை நிறுத்தவோ அல்லது உதவிக்கு வரவோ மறுத்து விட்டனர். இந்தநிலையில் மானபங்கத்தில் ஈடுபட்ட வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார்.
இதனால் அந்தப் பெண் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு விரைந்து வந்து பஸ்சை நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்தப்பெண் ஓடும் பஸ்சில் தன்னை வாலிபர் மானபங்கம் செய்ததாகவும், டிரைவர்–கண்டக்டர் உதவிக்கு வராததுடன் பஸ்சை நிறுத்த மறுத்து விட்டதாகவும் புகார் கூறினார்.
இதையடுத்து சம்பவத்தை தடுக்க தவறிய பஸ் டிரைவர், கண்டக்டர் கைது செய்யப்பட்டனர். மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating