மேட்டூரில் 7–ம் வகுப்பு படித்த வாலிபரை காதலித்து கரம் பிடித்த என்ஜினீயரிங் மாணவி!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள ஆயிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கார்த்திக் (வயது 23). இவர் 7–ம் வகுப்பு வரை மட்டும் தான் படித்துள்ளார். கார்த்திக், மேட்டூரில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
அப்போது வாலிபர் கார்த்திக்குக்கும், அதே பகுதி மார்க்கெட் பகுதியை சேர்ந்த அல்லிமுத்து என்பவரது மகள் கனிமொழிக்கும் (21) இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டது.
கனிமொழி என்ஜினீயரிங் படித்துள்ளார். காதலர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் இருவரது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இதனால் 2 பேரின் வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் சுதாரித்து கொண்ட காதல் ஜோடி , கடந்த 2–ந் தேதி வீட்டை விட்டு வெளியேறியது. பின்னர் நேற்று காலை சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் வைத்து காதலி கனிமொழிக்கு கார்த்திக் தாலி கட்டினார்.
இதைதொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு காதலன் கார்த்திக்குடன் கனிமொழி வந்தார். அங்கு சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தியை நேரில் சந்தித்து காதல் ஜோடி மனு கொடுத்தனர். அதில் தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களை சேர்ந்து வாழ வைக்கும் படியும் கேட்டு கொண்டனர்.
இதைதொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, காதல் ஜோடி இருவரையும் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு செல்லுமாறு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு போலீசார் காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினர்.
Average Rating