கேரள காங்கிரஸ் கூட்டணி அரசின் ஒரே பெண் மந்திரி ஜெயலட்சுமிக்கு விவசாயியுடன் நாளை திருமணம்!!
கேரள மாநில காங்கிரஸ் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் மந்திரி ஜெயலட்சுமி.
மானந்தவாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஆதிவாசி நலத்துறை மந்திரியாக உள்ளார். மேலும் இவர் ஆதிவாசி இனத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் ஆதரவாக இருந்தனர்.
ஜெயலட்சுமிக்கு அவரது பெற்றோர் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து இத்திருமணம் நாளை மானந்தவாடியில் நடக்க இருக்கிறது.
இதில் கலந்து கொள்ள மந்திரி ஜெயலட்சுமி தனது மந்திரி சபை சகாக்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து இருந்தார். அதோடு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியாவுக்கும், மூத்த தலைவர்களுக்கும் அழைப்பு கொடுத்திருந்தார்.
இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா, மந்திரி ஜெயலட்சுமிக்கு திருமண வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். இது போல காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான அந்தோணியும் ஜெயலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, திருமண பரிசாக அவரது தொகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சம் செலவில் கட்டிடம் கட்டி கொடுக்கப்படும் என அறிவித்து உள்ளார்.
மாநில மந்திரி ஆர்யாடன் முகம்மது தனது துறை சார்பில் மானந்தவாடியில் ஒரு செக்சன் ஆபிஸ் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.
மந்திரிகள் பலரும் திருமண பரிசாக மானந்தவாடிக்கு நல திட்டங்களை அறிவித்து இருப்பது தொகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இதனால் மந்திரி ஜெயலட்சுமியின் தொகுதி மக்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள்.
Average Rating