திருச்சி உறையூரில் ஒரே நாளில் 2 பெண்களிடம் 14 பவுன் செயின் பறிப்பு!!
திருச்சி உறையூர் ராமலிங்கா நகர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ஆனந்தி (வயது 42). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விசாலாட்சி (60).
நேற்றிரவு இருவரும் ஆனந்தி வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர்கள் 2 பேர் முகவரி கேட்பது போல பேசியுள்ளனர்.
பின்னர் திடீரென மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் ஆனந்தி கழுத்தில் கிடந்த 8 பவுன் மற்றும் விசாலாட்சி கழுத்தில் கிடந்த 6 பவுன் செயின்களை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் திருடன்…திருடன்… என்று சத்தம் போட்டுள்ளனர்.
அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினர். எப்போதும் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் நேற்றிரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீப காலமாக திருச்சி மாநகரில் நடைபெறும் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் பொது மக்களை பீதியடைய செய்துள்ளது. இதனால் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு மாநகரில் நடைபெறும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating