தாம்பரம் ரெயில் நிலையத்தில் 6 துப்பாக்கி தோட்டாக்கள்: இன்று காலை பரபரப்பு!!
தாம்பரம் ரெயில் நிலைய மேற்கு பகுதி நுழைவு வாயில் டிக்கெட் கவுண்டர் அருகே பயணிகள் ஓய்வு அறை உள்ளது. இங்கு தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகள் மற்றும் டிக்கெட் எடுக்க வருபவர்கள் அமர்வது வழக்கம்.
இன்று காலை 3 மணி அளவில் ரெயில்வே ஊழியர் முருகன் துப்புரவு பணியில் ஈடுபட்டார். அப்போது தரையில் சிறிய பை கிடந்தது. அதனை திறந்து பார்த்த போது 6 துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் பாய்ண்ட் 32 எம்.எம் ரகம் என்பதும், அவை கை துப்பாக்கியில் பயன்படுத்தப்படுபவை என்பதும் தெரிந்தது.
லைசென்சுடன் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் யாரேனும் ரெயில் நிலையத்திற்கு வந்த போது இந்த துப்பாக்கி தோட்டாக்களை தவற விட்டனரா அல்லது சமூக விரோதிகள் துப்பாக்கி தோட்டாவுடன் வந்த போது போலீசாரின் கெடுபிடியை கண்டவுடன் விட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Average Rating