மதுரை அருகே பேரையூரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியின் அலுவலக உதவியாளர் சுப்பிரமணி (வயது56). இவர் தற்போது பேரையூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார்.
அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் காண்டிராக்டை பேரையூர் தாலுகா சொக்கம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் எடுத்து நடத்தி வருகிறார். நோயாளிகளுக்கு உணவு வழங்கியதில் ரூ.40 ஆயிரம் வரை நிலுவை தொகை இவருக்கு வழங்க வேண்டி உள்ளது.
தனது நிலுவை தொகையை கேட்டு அலுவலக உதவியாளர் சுப்பிரமணியிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் ரூ.40 ஆயிரம் கொடுப்பதற்கான அனுமதியை வழங்காமல் அலைகழித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி, ரூ.40 ஆயிரத்துக்கு அனுமதி அளிக்க ரூ.3 ஆயிரத்தை அழகர்சாமியிடம் லஞ்சமாக கேட்டுள்ளார். அவரும் இன்று தருவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அழகர்சாமி, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. இசக்கி ஆனந்தனிடம் புகார் செய்தார். அவர் ரசாயனம் தடவிய ஆறு 500 ரூபாய் நோட்டுகளை அழகர்சாமியிடம் கொடுத்து அனுப்பினார்.
இதையடுத்து போலீசார் கூறிய அறிவுரைப்படி அழகர்சாமி பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த சுப்பிரமணியிடம் ரூ.3 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating