கன்னியாகுமரி கடலில் மிதந்த அம்மன் சிலை: சூரியோதயம் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!!
கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தின் அருகே அதிகாலையில் சுற்றுலா பயணிகள் சூரியோதயம் பார்க்க திரள்வார்கள்.
இன்று அதிகாலையிலும் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பெண்கள் கூடி இருந்தனர். சூரியன் உதயமான பின்பு அவர்கள் கடலில் கால் நனைக்க சென்றனர்.
அப்போது கடலுக்குள் பட்டுச்சேலை அணிந்தபடி ஒரு பெண் அசைவற்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் இதுபற்றி கடற்கரையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தெரிவித்தனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் கடலில் மிதந்த உருவத்தை கைப்பற்றி பார்த்த போது அது சிமெண்டால் செய்யப்பட்ட அம்மன் சிலை என தெரிய வந்தது. அந்த சிலை வர்ணம் பூசப்பட்டு அதன் மீது பட்டுச்சேலை அணிவிக்கப்பட்டிருந்தது.
இதனால்தான் அந்த சிலை கடலில் கிடந்தபோது பெண் ஒருவர் கடலில் மிதப்பதைபோல் காணப்பட்டது.
இந்த சிலையை கடலில் வீசிச்சென்றது யார்? எதற்காக போடப்பட்டது? என்பது பற்றி கன்னியாகுமரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating