கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளின் பட்டியல்கள் அதிரடியாக வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய 12 அதிகாரிகளின் பட்டியலை பொதுப்பணித்துறை காண்டிராக்டர்கள் சங்கத்தினர் வெளியிட்டனர்.
அதைத்தொடர்ந்து தமிழக அரசில் பணியாற்றும் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஊழல் செய்வதாக நோட்டீஸ் வெளியானது.
இந்தநிலையில் கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் ஊழல் அதிகாரிகள் என்ற பெயரில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
கோவை போக்குவரத்துக் கழகத்தில் திருப்பூர் கோட்டத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணன். இவர் லா பவுண்டேசன் இந்தியா என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
இவர் இன்று காலை திருப்பூர் பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு உள்ள பஸ்கள் மற்றும் சுவர்கள், கடைகளில் கோவை கோட்ட போக்குவரத்து துறையில் ஊழல் செய்யும் அதிகாரிகள் என்ற பெயரில் 10 பேரின் படத்துடன் நோட்டீஸ் ஒன்றை ஒட்டினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:–
தமிழ்நாடு கோவை கோட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது. அந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளில் முதல் 10 பேரின் பட்டியலை வெளியிட்டு உள்ளேன். இந்த ஊழல் காரணமாக கோவை போக்குவரத்து கழகம் நாசமடைந்து உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நோட்டீஸ் ஒட்டி வருகிறேன்.
நேற்று கோவையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்ட சென்றேன். ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் என்னை மடக்கி ஒரு காரில் ஏற்றி ஊரெல்லாம் சுற்றினர்.
பின்னர் ஒரு இடத்தில் இறக்கி விட்டு நோட்டீஸ் ஒட்டக்கூடாது என்று மிரட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று திருப்பூரில் நோட்டீஸ் ஒட்டியுள்ளேன். அடுத்து 2–வது பட்டியலை விரைவில் வெளியிட உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating