சேத்துப்பட்டில் தலையில் பாறாங்கல் போட்டு முதியவர் கொடூர கொலை: சைக்கோ வாலிபர் கைது!!
சேத்துப்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுக்கூர் (60). இவர் அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் கூலிக்கு வேலை செய்து வந்தார்.
இன்று அதிகாலை 4 மணிக்கு வழக்கம்போல் சுக்கூர் வேலைக்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மோகன் (35) என்ற வாலிபர் அங்கு வந்தார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
சுக்கூர் கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்த மோகன் திடீரென சுக்கூரை அடித்து உதைத்தான்.
இதில் நிலைகுலைந்து சாய்ந்த சுக்கூர் மீது வெறிப்பிடித்தது போலிருந்த மோகன் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து தலையில் போட்டான்.
இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுக்கூர் பரிதாபமாக பலியானார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் கொலையாளி மோகனை கையும் களவுமாக பிடித்து சேத்துப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மோகனை கைது செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில்:–
மோகன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சைக்கோ வாலிபர் போல் இந்த பகுதியில் சுற்றி திரிந்து வந்தான். ஏற்கனவே இதே விநாயகர் கோவில் தெருவில் ஒருபெண்ணையும், மேட்டுத் தெருவில் வாலிபர் ஒருவரையும் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் வேலூர் ஜெயிலில் தண்டனை அனுபவித்து தற்போது வெளியே வந்துள்ளான்.
இந்த நிலையில் மேலும் ஒருவரை கொடூரமாக கொன்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறினர். போலீசார் மோகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating