நோயாளியை வெளியேற்றிய விவகாரம்: கோவை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் விசாரணை!!
கோவை அரசு ஆஸ்பத்திரியில் தண்டபாணி(வயது 60) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கால், தொடை, எலும்பு மற்றும் உடலின் பல இடங்களில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார்.
அவரை, விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் அவர் 95–வது வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 27–ந்தேதி ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நடைபாதையில் கொண்டு வந்து விட்டுச் சென்று விட்டனர். அவரால் நடக்க முடியாததால், நடைபாதையிலேயே 4 நாட்களாக கிடந்தார்.
இதைப்பார்த்த அப்பகுதியினர் தண்டபாணிக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவினர். அவரது கையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது. அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, சாப்பிட முடியாமல் சிரமப்பட்டார். இதையடுத்து சிலரது உதவியுடன் தண்டபாணி நேற்று முன்தினம் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை சட்ட விரோதமாக வெளியேற்றியது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருக்கு புகார் சென்றது. உடனே அவர் இதுபற்றி கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் எட்வின் ஜோவிடம் விசாரணை நடத்தினார். மேலும், 3 பேர் கொண்ட குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் எட்வின் ஜோவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இன்று மாலைக்குள் விசாரணை முடிந்து சுகாதாரத்துறை செயலாளருக்கு விளக்கம் அளிக்கப்படும் என்றார்.
டீன் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
Average Rating